×

ஆண் குழந்தை பிறக்காத ஆத்திரம்; காதல் மனைவிக்கு எச்ஐவி ஊசி; கொடூர கணவன் கைது; பெண் டாக்டரிடம் விசாரணை

திருமலை: குண்டூரில் ஆண் குழந்தை பிறக்கவில்லை என்று கூறி காதல் மனைவிக்கு எச்ஐவி ஊசி போட்ட கணவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தாடேப்பள்ளியை சேர்ந்தவர் சரண் (35). இவரது மனைவி மாதவி (32). இவர்கள் காதலித்து கடந்த 2015ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஆண் குழந்தை இல்லாத ஏக்கம் இருந்தது. இந்நிலையில் மாதவியிடம், ‘எனது 2 தம்பிகளுக்கு ஆண் குழந்தைகள் உள்ளது.

இந்து சம்பிரதாயத்தில் நாம் இறந்தால் மகன் தான் இறுதி சடங்கு செய்யவேண்டும். எனவே, நமக்கு ஆண் குழந்தை வேண்டும்’ என கூறியுள்ளார். அதே நேரத்தில், மங்களகிரியை சேர்ந்த ஆர்எம்பி மருத்துவர் ரமாதேவி மூலம் மாதவிக்கு சத்து மருந்து எனக்கூறி 3 முறை நரம்பில் மருந்து செலுத்தினர். அதற்கு பிறகு அவரது உடல் சோர்வு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் மாதவிக்கு எச்ஐவி பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த மாதவி, தாடேப்பள்ளி காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதில், ‘எனது கணவர் சரண் விசாகப்பட்டினத்தை சேர்ந்த வேறு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார். அவரை திருமணம் செய்து கொள்ள முயன்று வருகிறார்.

இதுகுறித்து கேட்டதால் என்னை எப்படியாவது ஒதுக்கி வைக்க எனது கணவர் உடல் பலவீனமாக இருப்பதாகவும், ஆண் குழந்தை பிறக்க சத்து மருந்து தேவை எனவும் கூறி எச்ஐவி தொற்று ஊசியை எனக்கு செலுத்தியுள்ளார்’ என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, போலீசார் சரணை கைது செய்து, மருத்துவர் ரமாதேவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பெண்ணின் குற்றச்சாட்டில் உண்மை தன்மையை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags : male childless rage; HIV injection for love wife; Cruel husband arrested; Interrogation with female doctor
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...